ஆவுல் பக்கிர் ஜெய்னுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam, 15 அக்டோபர் 1931 – 27 சூலை 2015) பொதுவாக ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகின்ற இவர் ஒரு இந்திய அறிவியலாளரும், நிர்வாகியும் ஆவார். இவர் இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றினார். இவர் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் இயற்பியலும் சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.
இவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் (ISRO) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் பங்களிப்பால், இவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார். 1998 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் – II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக இவர் முக்கிய பங்காற்றினார்.